"அரக்கோணம் அருகே அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் மறியல் !!!"
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து வளர்புரம் வழியாக கிருஷ்ணாபுரம் வரை அதிகாலை 5 மணிக்கு தடம் ND -2 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் காலை 6.30 மணிக்கு வளர்புரம் வந்து தணிகைபோளூர் வழியாக அரக்கோணம் வந்து சேருகிறது.
இந்த பஸ்சில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், கட்டிட வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லோரும் அரக்கோணம் வருவதற்கு இந்த அரசு டவுன் பஸ் பெரும் உதவியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த டவுன் பஸ் முள்வாய் கிராமத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.இதனால் காலை 6.30 மணிக்கு வளர்புரத்துக்கு வரவேண்டிய அரசு டவுன் பஸ் காலை 9 மணிக்கு வருவதால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயனில்லாமல் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோதும் எந்தவித பதிலும் இல்லை. இதில் ஆத்திரம் அடைந்து வளர்புரம் மற்றும் தணிகைபோளூரை சேர்ந்த கிராம மக்கள் இன்று தணிகை போளூர் பஸ் நிறுத்தம் அருகில் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரக்கோணம் தாலுகா போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அங்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனிமேல் குறித்த நேரத்துக்கு பஸ் இயக்கப்படும் என்று கூறி மறியலை கைவிட வைத்தனர். இதை தொடர்ந்து பஸ் அங்கிருந்து 40 நிமிட காலதாமதத்தில் புறப்பட்டு சென்றது.
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை