திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட துத்திப்பட்டு ஊராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊராட்சிக்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவ-மாணவிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள், பேனா, புத்தகம், பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார். மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து ஊராட்சியில் உள்ள வணிகர் சங்கம் சார்பிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கட்ராம்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜோயல், அம்பேத்கர் நகர் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, ஐஏஎல்சி பள்ளி குளோரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் முரளிகாந்த் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.






கருத்துகள் இல்லை