• சற்று முன்

    'பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை' - 57 வயது ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைது


    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அதே பள்ளியில் உள்ள ஆசிரியர் பாஸ்கர் (57) என்பவர் அங்கு பயின்று வரும் சிறுமிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிறுமிகள் இதுபற்றி அவர்களது பெற்றோரிடம் கூறியதை அடுத்து பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்கள் பள்ளியில் திரண்டு சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளியில் சிறுமிகளிடம் மோசமாக நடந்து கொண்ட ஆசிரியரை உடனே கைது செய்து, இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பின்னர், இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை டி.எஸ்.பி காவியா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரி, குழந்தைகள் நல அதிகாரி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பள்ளியில் பயிலும் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், சம்பவம் தொடர்பான சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மேலும், ஏற்கனவே பெற்றோர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி (55) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசியரும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் கைதான சம்பவம், மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad