வாக்கு என்பது ஒரு குடிமகனின் உரிமை. உரிமை மட்டுமல்ல, அதிகாரம், பலம், ஆயுதம்.
வாக்கு என்பது ஒரு குடிமகனின் உரிமை. உரிமை மட்டுமல்ல, அதிகாரம், பலம், ஆயுதம். அதன் தன்மையை அறிந்து பயன்படுத்தினால் அது ஏற்படுத்தும் மாற்றங்கள் மகத்தானவை. மக்கள், தங்கள் தலைவிதியைத் தாங்களே உருவாக்கிக்கொள்ளத் தரப்பட்ட பலம் பொருந்திய கருவிதான் வாக்கு. இந்தப் புரிதலை குடிமக்களுக்கு ஏற்படுத்திவிட்டால், அவர்கள் அதை முறையாகப் பயன்படுத்துவார்கள். இதற்கு ஒரு தயாரிப்பு தேவைப்படுகிறது. அரசாங்கத்தில் எப்படிச் சட்டங்கள், திட்டங்கள், கொள்கைகளை உருவாக்குகிறோமோ அதேபோல, அந்தத் திட்டங்களையும், சட்டங்களையும், கொள்கைகளையும் பயன்படுத்தும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அரசாங்கமும் சந்தையும் எப்படித் தம் பாதையில் தொடர்ந்து இயங்குகின்றனவோ, அதேபோல் சமூகமும் முழுமையாக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி, அதை மொத்தச் சமூகத்துக்குமானதாக இயங்கவைக்க வேண்டும். அதற்கு, சமூகத்தைத் தயார்செய்ய வேண்டும். சமூக மேம்பாட்டில் மிகப்பெரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதேபோல சமூகத்துக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பைச் சமூகம் நிறைவேற்றாவிட்டால் அரசாங்கமே அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இன்றைக்கு, சமூகம் தன் பொறுப்புகளை மறந்து, எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் தந்துவிட்டு, ‘அரசாங்கம் முறையாகச் செயல்படவில்லை, ஊழல் மலிந்துவிட்டது’ என்று புலம்புகிறது.






கருத்துகள் இல்லை