தூத்துக்குடியில் பிப்.8ல் குரூப் 2 முதன்மைத் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
தூத்துக்குடியில் பிப்.8ல் குரூப் 2 முதன்மைத் தேர்வு : முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை! தூத்துக்குடியில் வருகிற 8ஆம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி II & IIA பணிகள்) முதன்மைத் தேர்வுகள் 08.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெறவுள்ளது. முற்பகலில் 236பேரும், பிற்பகலில் 247பேரும் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வு பணிக்கென துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு இயங்கு குழு (Mobile Team) அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்விற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மின்சார வாரியம், கருவூலத் துறை, பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை ஆகிய தொடர்பு துறைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அனைத்து துறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. மேலும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எளிதாக சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு தேர்வு நாளான 08.02.2026 அன்று காலை 8.30 மணிக்கு முன்னரே தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும். உரிய நேரமான முற்பகல் 09.00 மணிக்கும் பிற்பகல் 2.00 மணிக்கும் பின்னர் வருகை தரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதை தொடர்ந்து தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், Smart Watch, தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்






கருத்துகள் இல்லை