• சற்று முன்

    "கிராம மக்கள் சபை" கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் ஏகமனதாக தீர்மானம்.

    அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ, கலெக்டர் நேரில் வரவேண்டும். இல்லையென்றால் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம். கீரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற "கிராம மக்கள் சபை" கூட்டத்தில் பொதுமக்கள் ஏகமனதாக தீர்மானம்.

    செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட இருளர்கள், ஆதிதிராவிடர்கள், கல்லுடைக்கும் ஏழை தொழிலாளர் குடும்பத்தினர் உட்பட அனைத்து தரப்பு குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்து வலியுறுத்தி வந்தனர். இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வே செய்யப்பட்டு அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் இருந்தபோது கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க முடியாது நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அனைத்து கோப்புகளும் மாயமாகிவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காணாமல் போன கோப்புகளை கண்டுபிடித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் அல்லது புதிதாக சர்வே செய்யப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நாளை மறுதினம் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்மன் கோவில் தெருவில் குடியிருந்து வரும் இருளர்கள் பகுதியில் பொதுமக்களின் சார்பில் ஊராட்சி மன்ற 4-வது வார்டு உறுப்பினர் சசிகலா தனசேகரன் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிர்த்த போராட்டம் நடத்துவோம் என்று கடந்த 7 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதுகுறித்து இன்று காலை 10 மணி அளவில் பொதுமக்களிடம் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் வண்டலூர் தாசில்தார் கூறினார். இதனையடுத்து "கிராம மக்கள் சபை கூட்டம்" ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நேற்று இரவு 4-வது வார்டு உறுப்பினர் சசிகலா தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறு-குரு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்து அதற்கான பணிகளை தொடங்கினால் மட்டுமே மேற்படி உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவோம் என்றும், இல்லையென்றால் திட்டமிட்டப்படி மேற்படி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் என்றும் கூட்டத்தில் ஏக மனதாக பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் விநாயகபுரம் பகுதியில் விளையாட்டு திடல், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சியகம், சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து மூடி போட வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் கிணற்றில் சைடு பகுதிகளில் போர்வெல் அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும். தெரு சாலைகளை சீரமைக்க வேண்டும். கால்வாய் இல்லாத பகுதிகளில் கால்வாய்கள் அமைக்க வேண்டும். புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும். தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அனைவருக்கும் பிரதம மந்திரி வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்தவர்களுக்கு பணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


    சம்பந்தமே இல்லாத ஏரியால் பரிதவிக்கும் பொதுமக்கள்.

    கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 94 குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளாக மெயின் ரோட்டில் குடியிருந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் குடியிருக்கும் பகுதியின் 100 மீட்டர் அருகே ஏரி உள்ளது. இதில் ஏரிக்கும் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கும் சம்பந்தமே இல்லை. மற்ற ஊர்களில் ஏரியை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி உள்ளனர். ஆனால் இந்த கிராமத்தில் மட்டும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. மேலும் மக்கள் குடியிருக்கும் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கோவில்கள், சர்ச் ஆகியவை உள்ளன. ஆனால் சர்வே எண் 62 ல் ஏரி உள்வாய் என இருப்பதால் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்கபெற முடியாமல் அரசு தொகுப்பு வீடுகள் கழிப்பறைகள் மற்றும் அரசு சலுகைகள் கிடைக்கப்பெறாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் மக்கள் குடியிருக்கும் பகுதியின் சர்வே எண் 62 இல்லை என்றும், இதற்கு வேறொரு எண் மற்றும் வகைப்பாடு என்றும் மக்கள் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் தலையிட்டு மேற்படி சர்வே எண் 62 இல் உள்ள ஏரியை அளவீடு செய்ய வேண்டும் இதே போல் மக்கள் குடியிருக்கும் பகுதியின் சர்வே எண் மற்றும் வகைபாட்டினை கண்டுபிடித்து மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    செய்தியாளர் : தனா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad