Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டி – 2023


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த பதினொரு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதே போல இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் புது டெல்லி, ஹாக்கி இந்தியாவின் அனுமதியுடன் வருகின்ற  மே 18ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.  

    இப்போட்டியின் துவக்க விழா மே 18ம் தேதி மாலை 05.00 மணி அளவில் நடைபெற உள்ளது. டில்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த தேசிய நடுவர்கள் கலந்து கொண்டு போட்டியை நடத்த உள்ளனர். இப்போட்டியில் கலந்து கொள்ள அகில இந்திய அளவில் பல்வேறு அணிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், யூனியன் பேங்க் - மும்பை, ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே - புவனேஷ்வர், கனரா பேங்க் - பெங்களூரு, இந்தியன் பேங்க் - சென்னை, சிஏஜி – புதுடெல்லி மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு விளையாட உள்ளன. இப்போட்டிகள்  கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. 

    கலந்து கொள்ளும் அணி வீரர்கள் அனைவருக்கும் போக்குவரத்து செலவுகள் தங்குமிட வசதி, உணவு அனைத்தும் அறக்கட்டளையினரால் வழங்கப்படுகிறது. 


    தினமும் காலை 06.30 மணிக்கு ஒரு போட்டியும் மாலை 04.30 மணிக்கு ஒரு போட்டியும் 06.30 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 08.15 மணிக்கு ஒரு போட்டியும் மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை. போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு எழுபத்து ஐந்தாயிரமும், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ஐம்பதாயிரமும், நான்காவது இடம் பெறும் அணிக்கு முப்பதாயிரமும் இலட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது. மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் இருபதாயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. 

    நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளன.  இப்போட்டிக்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர்  கே.ஆர்.அருணாசலம் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல் தலைமையில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் காளிதாஸ் முருகவேல்.கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மதிவண்ணன், இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராஜேஸ்வரன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், ஹாக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad