Header Ads

  • சற்று முன்

    ராஜபாளையம் அருகே மேலூர் கல்குவாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி உடன் டெம்போ வாகனம் பறிமுதல்

    ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் கல்குவாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரவில் கற்களை கொண்டு சென்ற லாரி, அரிசியை கடத்தி சென்ற டெம்போ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி குறித்து ஆய்வு செய்வதற்காக சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் சென்றிருந்தார். அவர் செல்லும் போது எதிரே டெம்போ வாகனம் வந்துள்ளது.


    அதை நிறுத்தி விசாரணை செய்த போது ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். ஆய்வு செய்ததில் அதில் அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி மூடைகள் இருந்துள்ளது. அருகே உள்ள கல்குவாரியில் இருந்து அரிசி மூடைகளை எடுத்து செல்வதாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார். அவரது தகவலின் பேரில் கோட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன் உள்ளிட்டோர் காவல் துறையினர் பாதுகாப்புடன் கல் குவாரியில் சோதனை நடத்தினர்.

    அங்கிருந்த குடோனில் ரேஷன் அரிசியை சாக்கு மாற்றி மூடைகளாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த நேரத்தில் டெம்போ வாகன ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார். ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 மூடைகள் மற்றும் டெம்போ வாகனத்தில் கடத்தி சென்ற 35 மூடைகள் என 285 மூடைகளில் இருந்த 15 டன் ரேஷன் அரிசி மற்றும் டெம்போ வாகனத்தை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad