திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து.. துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு..
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு, சுற்றுலா பேருந்து ஒன்று 50 பயணிகளுடன், இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. நத்தம்பட்டி அருகே சுற்றுலா பேருந்து சென்றபோது, சீர்காழி பகுதியில் இருந்து ராஜபாளையத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற கார் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்த, சீர்காழியைச் சேர்ந்த விஜயலட்சுமி, மாலதி, சுப்புலட்சுமி, மகேந்திரன், தங்கமுடி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து தகவலறிந்த நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 5 பேருக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை