சத்துணவு மாவு மூட்டைகள் கடத்திய அங்கன்வாடி மைய பணியாளர் பணியிடை நீக்கம்-மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நடவடிக்கை.
மதுரை மாநகராட்சி 74 வது வார்டுக்கு உட்பட்ட பழங்காநத்தம் வடக்கு தெரு பகுதி உள்ள அங்கன்வாடி மையத்திலிருந்து நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் அங்கன்வாடியை நள்ளிரவில் திறந்து அங்கிருந்து ஒரு தலா 25கிலோ பாக்கெட்டுகள் அடங்கிய 16 மூட்டைகளை கடத்திய நிலையில் சத்துணவு மாவு பாக்கெட்டுகள் கடத்தப்படுவதை அந்த பகுதி பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் அங்கன்வாடி அலுவலகத்தை முற்றுகையிட்டு கடத்தல் குறித்து பணியாளர்களிடம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்காத நிலையில் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியானதன் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பயனாளிகளுக்கு முறையாக இணை உணவை வழங்காமல் அதை கடத்தி சந்தையில் விற்பனை செய்யும் செயலில் அங்கன்வாடி மைய பணியாளர் ராதா ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கன்வாடி மையத்திலிருந்து இணை உணவு கடத்திய அங்கன்வாடி மைய பணியாளர் ராதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் இந்த கடத்தலுக்கு பின்புலம் யார், அதனை வாங்கியவர் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை