தருமபுரம் ஆதீனம் பட்டினபிரவேசம் தடையை நீக்கியது
கடந்த இரண்டு வாரங்களாக சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சைவ மடங்களை சேர்ந்த அடியார்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் சுமந்து மடங்களை சுற்றியுள்ள வீதிகளில் அடியவர்கள் வலம் வருவதுதான் பட்டினப் பிரவேசம் நிகழ்வு.
இதில் மனிதனை மனிதன் தூக்க அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியாகின.
விரைவில், பட்டினப் பிரவேச நிகழ்வு தொடர்பாக சுமூகமான முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆதினகர்த்தர்கள் சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது அந்த நிகழ்ச்சி குறித்து முதல்வரிடம் விளக்கியதாகவும் அதன் அடிப்படையில் பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் வாய்மொழி உறுதி கூறியுள்ளதாகவும் ஆதீனகர்த்தர்கள் இன்று மைலாடுதுறையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியிருக்கிறது. பட்டினப்பிரவேசத்துக்கு தடை விதித்திருந்த கோடாட்டசியரே இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை