கன்றுனை காப்பாற்ற ஒற்றை யானையுடன் போராடி உயிரை மாய்த்து கொண்ட பசு மாடு அதிர்ச்சில் குடியாத்தம் விவசாயி மக்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNEuYKVd17w4sGVPqPxaRCeyutm3COsDyKOE1Zjk3hcn_7J2lcyMrDUcHPMXWzVskgJsUwr-ZEvIhL6fIuj-8jN2injOTl68sOshtdK0DFkWjxtx5tOu9vQ6yPuVOXDFgJh9z_L_vdhs72/w640-h550/e3e1364e-8c93-45ad-8340-7624e630729d.jpg)
இந்த யானை கூட்டங்களில் இருந்து பிரிந்த ஆண் ஒற்றை யானை குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள கொத்தூர், டி.பி.பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்தது. இரவு நேரங்களில் அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த யானையை வனத்துறையினர் விரட்டி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம்- சித்தூர் சாலையில் ராமாபுரம் மேடு என்ற இடத்தில் சாலையில் நின்று கொண்டு ஒற்றையானை பிளிறுக் கொண்டு சுற்றி திரிந்தது. தகவல் அறிந்த குடியாத்தம் வனச்சரக அலுவலர் சங்கரய்யா, வனவர் முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், மேளமடித்தும் ஒற்றை யானையை துருகம் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
சில மணி நேரம் கழித்து அந்த ஒற்றை யானை பரதராமி அருகே உள்ள அங்கனாம்பல்லி கிராமத்துக்கு வந்தது. அங்குள்ள நிலத்தில் கொட்டகை அமைத்து சிவலிங்கம் (வயது 65) என்பவர் தங்கியுள்ளார். கொட்டகையில் பசுமாடு மற்றும் கன்றுகளை கட்டியிருந்தார். அந்த நிலத்துக்குள் யானை பிளிறியபடி புகுந்தது. இதனை கண்ட சிவலிங்கம் பயந்து அலறியபடி கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதற்குள் அந்த யானை அங்கு கட்டியிருந்த கன்று குட்டிகளை தந்தத்தால் குத்தவும், காலால் மிதிக்கவும் வந்தது. அதனை கண்ட தாய்ப்பசு யானை முன்னே பாய்ந்து யானையுடன் சண்டை போட்டது. அப்போது யானை பசுமாட்டை தந்தத்தால் குத்தி கொன்றது.
இதனிடையே கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து வருவதற்குள் யானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைந்து விட்டது. தனது கன்றுகளை காப்பாற்ற தாய்ப்பசு யானையிடம் போராடி இறந்த செய்த சம்பவம் கிராம மக்களை கண்கலங்க செய்தது.
ஒற்றை யானை அட்டகாசம் குறித்து தகவல் அறிந்ததும், வேலூர் மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் மஞ்சுநாதா, மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டோரா போட நடவடிக்கை எடுக்கப்பட்டது,
அதன்படி பரதராமி, கொத்தூர், டி.பி.பாளையம், வீரிசெட்டிபல்லி, பூசாரிவலசை, அங்கனாம்பல்லி, கதிர்குளம், வரதாரெட்டிபல்லி, துருகம், அனுப்பு உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஒற்றையானை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் நிலங்களுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், விவசாய நிலங்களில் கொட்டகையில் தங்கியிருப்பவர்கள் உஷாராக இருக்குமாறும், இரவு நேரங்களில் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறும் தண்டோரா மூலம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை