கோவில்பட்டி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை விரிவாக்கப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இந்நிலையில், பிரதான சாலையின் ஒரு பகுதியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதையடுத்து சாலை விரிவாக்கப் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ஆணணையை தள்ளி வைத்து நீதிமன்றத்தில் ஆணை பெற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்வரத்து ஓடைக்கடை ஆக்கிரமிப்புகளை சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் விரைவில் அப்புறப்படுத்தி சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். நீர்வரத்து ஓடைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் வணிகர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில், கோட்டாட்சியர் அலுவலக வளாகம் மற்றும் கோட்டாட்சியர் அறையில் தரையில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், நகரச் செயலர் சரோஜா, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ், வட்டச் செயலர் பாபு, நகரத் தலைவர் அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கோட்டாட்சியர் விஜயா நடத்திய பேச்சுவார்த்தையில், ஓடை ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு அவ்வப்போது பத்திரிகைகள் மூலம் தெரிவிப்பதாக கூறினார். அதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்றோர் கலைந்து சென்றனர்
கருத்துகள் இல்லை