சென்னை மைலாப்பூர் பகுதியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் ! 3 பேர் கைது !
சென்னை நகரில் லாக்டவுன் தொடங்கியதில் இருந்து கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இருந்து காய்கறி லோடு லாரியில் கஞ்சா கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். கஞ்சா புழக்கத்தை முற்றிலும் தடுக்க சென்னை நகரில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார். அதனையடுத்து போலீசார் அவ்வப்போது கஞ்சாவை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை ராயப்பேட்டை போலீசார் ரோட்டரி நகர் மற்றும் லாயிட்ஸ் ரோடு சந்திப்பு அருகே ரகசியமாக கண்காணித்த போது அங்கு 3 பேர் ஆட்டோவில் கஞ்சா பதுக்கி வைத்து, ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் ராயப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
கஞ்சா விற்ற நபர்கள் சென்னை, பட்டாளத்தைச் சேர்ந்த கணேஷ் (34), ராயப்பேட்டை ரோட்டரி நகரைச் சேர்ந்த விஜய் தினேஷ் (30) மற்றும் திருவல்லிக்கேணி கீதன் (23) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 25 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள், ரூ. 5,600 ரொக்கம், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணை நடத்தியதில் ராயப்பேட்டை பகுதியில் வாட்ஸப் குழு அமைத்து அதன் மூலமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் அளித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பின்னர் மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் மைலாப்பூர் துணைக்கமிஷனரின் தனிப்படையினரால் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை