Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.


    திருவண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
    அதைத்தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பின்பற்ற வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, தேர்தல் தாசில்தார் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், பல்வேறு அரசு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செஞ்சி, மயிலம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடங்கியுள்ளன.
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 1,719 வாக்குச் சாவடிகளும், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 1,756 வாக்குச் சாவடிகளும் உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    தேர்தல் தொடர்பான விவரங்கள் அறிய தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கு கலெக்டரும், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் அரசியல் கட்சியினர் தங்களது சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்ற வேண்டும். நாங்கள் அகற்றினால் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். இந்த தேர்தலில் முதல் முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி பயன்படுத்தப்பட உள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 19 லட்சத்து 71 ஆயிரத்து 317 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது பெறப்பட்ட மனுக்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் சாதுக்கள் 580 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 94 பேரும் உள்ளனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் நடத்த தேவையான வாக்குச்சாவடி அலுவலர்கள் சுமார் 11 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
    மேலும் வாக்காளர்களுக்கு தேவையான விவரங்கள் அறிய தேர்தல் ஆணையம் மூலம் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. அதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் cV-I-G-IL என்ற செல்போன் செயலி இந்த தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
    இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தெரிவிக்கலாம். இதில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது. இதில் புகார் தெரிவிக்கப்பட்ட குறிப்பிட்ட சில மணி நேரத்தில் அதிகாரிகள் அங்கு சோதனை செய்வார்கள்.
    இதில் புகார் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், அந்த புகார் எங்கிருந்து வந்துள்ளது என்று இடத்தை கண்டறிய முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொய் புகார்கள் தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 865 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்டறிப்பட்டு வாக்காளர் பட்டியலில் அவர்களின் விவரம் பதியப்பட்டு உள்ளன. மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு தேர்தல் நடைபெறும் அன்று அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். அதற்கான PwD என்ற செல்போன் செயலி மூலமாக தங்களுக்கு தேவையான வசதிகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகளில் 240 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறுகையில், ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் கூறுவது ஒரே கோரிக்கை தான். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

     செய்தியாளர் : திருவண்ணாமலை  .வி.முர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad