அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி சிறை அடுத்து நாளை மேல் முறையீடு
ஓசூர் தனித் தொகுதியிலிருந்து கடந்த தேர்தலில் அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலகிருஷ்ண ரெட்டி. இவர் 1999ம் ஆண்டுக்கு முன்னர் வரை பாஜகவில் இருந்தார். 1998 ஆம் ஆண்டு ஒசூர் அருகேயுள்ள பாகலூர் என்ற இடத்தில் கள்ளச் சாராய விற்பனையை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வந்தது. இதன்பின் எம்பி,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு கோர்ட்க்கு வழக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே பாலகிருஷ்ணரெட்டி பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து எம்எல்ஏவாகி அமைச்சரானார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கோர்ட் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உள்பட 16 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்தது. இதில் தற்போதைய அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,500 அபராதமும் விதித்தது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவரது எம்எல்ஏ பதவியும் பறிபோகிறது. அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். பாலகிருஷ்ண ரெட்டி மேலும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. மேல்முறையீட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்கிறது.
இதற்கிடையே பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. நாளை அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்கிறார்.
கருத்துகள் இல்லை