கோவில்பட்டி அருகே கணவன் மனைவிக்கு அரிவாள் வெட்டு - 15 பவுன் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள பாண்டியா புரத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் தர்மராஜ் (41). இவர் ஆந்திராவில் கடலை மிட்டாய் நிறுவன வைத்துள்ளார். நேற்று மாலை, தர்மராஜூம், அவரது மனைவி வள்ளி மயிலும் தீபாவளிக்காக கோவில்பட்டியில் உள்ள ஜவுளிக் கடையில் துணி எடுத்து விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பினர், கோவில்பட்டி அருகே உள்ள சித்திரம் பட்டி பகுதியில் சென்றபோது இவர்களை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். இருவரும் அணிந்திருந்த நகைகளை கேட்டுள்ளனர். இருவரும் தர மறுக்கவே மர்ம நபர்கள் அரிவாளால் இருவரும் வெட்டிவிட்டு, தர்மராஜ் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை, அவரது மனைவி வள்ளிமயில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலி ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காயமடைந்த இருவரையும், மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தீபாவளிக்கு துணி எடுத்து சென்ற தம்பதியை அரிவாளால் வெட்டி விட்டு பவுன் நகை பறித்து சென்ற சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை