வழக்கை வாபஸ் பெற கன்னியாஸ்திரியிடம் பேரம் பேசிய பிஷப்!
வழக்கை வாபஸ் பெற பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஐந்து கோடி ரூபாய் வழங்க பிஷப் முன் வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த 40 வயதான கன்னியாஸ்திரி ஒருவரை பிஷப் ஃப்ராங்கோ முல்லக்கால் 2014 முதல் 2016ம் ஆண்டுவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாககுற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிஷப் ஃப்ராங்கோ முல்லக்கால் சார்பாக வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள ரூ.5 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்ததாகப் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஃப்ராங்கோவின் உறவினர்களும், அவரது நண்பர்களும் தங்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குற்றம்சாட்டப்பட்ட பிஷப் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி நான்கு கன்னியாஸ்திரீகள் கொச்சியில் கேரள உயர்நீதிமன்றம் அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாஸ்திரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் சிலரும் பிஷப் மீது நடவடிக்கை எடுப்பதில் கேரள அரசு தாமதித்து வருவதாகக் கூறி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதில் அரசியல் மற்றும் பண பலத்தை பிஷப் பிரயோகப்படுத்துவதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை