பட்டா வழங்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட விவசாயிகள்
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தாலூகாவிற்குட்பட்ட கசவன்குன்று கிராமத்தில் உள்ள பல விவசாயிகள் நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக தங்களது கால்நடைகளுக்கான கொட்டைகள், குப்பைகள் கொட்டுவது, கால்நடைகளுக்கான தீவனங்கள் வைக்கும் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த நத்தம் புறம்போக்கு நிலங்களை , அரசு சார்பில் சிலருக்கு இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கசவன்குன்று கிராமத்தினை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் 3 தலைமுறைகளாக அந்த இடங்களை பயன்படுத்தி வருவதாகவும், எனவே அரசு தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்று நபர்களுக்கு கொடுக்கும் போது, தேவையில்லாத பிரச்சினை வரும் என்று கூறி கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எட்டயபுரம் தாசில்தார் வதனாளிடம் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை