கோவில்பட்டி பகுதியில் பல்வேறு திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது – 21 பவுன் தங்க நகை பறிமுதல்
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 21பவுன் தங்கநகை மற்றும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின் பேரில் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெபராஜ் ஆலோசனையின்பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் தலைமையில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், முத்துவிஜயன், சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர்கள் முருகன், நாராயணசாமி, முதல்நிலை காவலர் கந்தசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த சில நாள்களாகவே பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டி.எஸ்.பி. ஜெபராஜுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வியாழக்கிழமை மந்தித்தோப்பு சாலை ஊத்துப்பட்டி விலக்கில் தனிப்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அதையடுத்து அவர்கள் வைத்திருந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில், இரும்புக்கம்பி ஒன்று இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், செண்பகப்பேரியைச் சேர்ந்த முத்தங்கு மகன் பாலமுருகன்(35) மற்றும் கரடிகுளத்தைச் சேர்ந்த ஈக்கியாஸ் என்ற ஈசாக்கு மகன் அய்யனார்(30) என்பதும், இவர்கள் இருவரும் கோவில்பட்டி தெற்கு பஜார், நடராஜபுரம், மந்தித்தோப்பு கணே~; நகர், கொப்பம்பட்டி பரசுராமபுரம், சிவந்திப்பட்டியில் உள்ள குமாரபுரம், கோவில்பட்டி டவுணில் உள்ள பாத்திரக்கடை, ஜவுளிக்கடை ஆகிய இடங்களில் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 21 பவுன் தங்கநகை மற்றும் ரூ.1லட்சத்து28ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை