வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி - ஒருவர் கைது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 16 லட்சம் ரூபாயை மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கணேசன் என்பவர் அட்டண்டராக பணிபுரிந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் இறந்து விட்டதால் அவரது மகன் சிட்டிபாபு (35) தனது தந்தையை தொடர்ந்து பல்கலைகழத்திலேயே தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.
இவரின் உறவினர்கள் பலரும் இதே பல்கலைகழகத்தில் பணியில் உள்ளனர். அதனால் சிட்டிபாபு பல புரோக்கர்களை கையில் வைத்து கொண்டு வேலை வாங்கி தருவதாக ஆட்களை சேர்ப்பதற்கு பல இடங்களில் தயார் செய்துள்ளனர். அதன்படி, திண்டுக்கல்லை சேர்ந்த மோகன் என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சத்து 20 ஆயிரத்தை முன்தொகையாக பெற்று வேலை வாங்கி தராமல் ஏமாற்றி காலம் தாழ்த்திவந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மோகன் கடந்த 12-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இதே போல் சின்னமனூரை சேர்ந்த சூர்யா (25), கார்த்திக் (24), உசிலம்பட்டி பத்மசுந்தர் (24), நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த அன்புராஜ் (36) ஆகியோர்களிடமும் வேலை வாங்கி தருவதாக ஏற்கனவே தலா ரூ. 4 லட்சம் வீதம் 16 லட்சம் வாங்கியுள்ளார்.
ஆனால், வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், இது தொடர்பான செய்தி வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னமனூரை சேர்ந்த சூர்யா, சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிபடையில் ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் விரைந்து மோசடியில் ஈடுபட்டுள்ள சிட்டிபாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பாரதியார் பல்கலைகழகம் துணை வேந்தர் கணபதி பணி நியமனம் விவகாரத்தில் ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரனை நடக்கும் நிலையில், தற்போது மதுரை காமராஜர் பல்கலைகழத்தில் பணிபுரிந்து வருபவர்கள் மோசடியில் ஈடுப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை