காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 831 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் செப் 21, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. இரஞ்சித்குமார் ஆகியோர் முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.முனிரத்தினம் முன்னிலை வகித்தார்.வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு பேசியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த இங்கிலாந்து வெளிநாட்டு பயணத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ. 15,300 கோடி முதலீடுகளை ஈர்த்து, கிட்டத்தட்ட 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். மேலும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் நலன் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகிறார். அதேபோல், இவ்வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 154 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. குறிப்பாக நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வேலை செய்ய வருகிறார்கள். குறிப்பாக திருப்பெரும்புதூர் போன்ற பகுதிகளில் பல இலட்சக்கணக்கான மக்கள் மற்றும் குடும்பங்கள் இந்த வேலைவாய்ப்புகளின் மூலம் பயனடைந்து முன்னேறி வருகின்றனர். என்னுடைய முக்கிய நோக்கம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். உள்ளூர் மக்கள் தொழிற்சாலை அமைவதற்கு நிலங்களை வழங்கி ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். ஆகவே உள்ளுர் சார்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் தொழிற்சாலையில் முன்னுரிமை வழங்கிட வேண்டி, இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எனவே, இந்த மாவட்டத்தின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது நமது ஆட்சியின் கீழ் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். 4,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் பெண்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு ஆணைகளை உங்களுக்கு வழங்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகுந்த ஆர்வத்துடன் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். தமிழ்நாடு முதலமைச்சர் நிச்சயமாக தமிழ்நாட்டை நாட்டிலேயே முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவார் அவருடன் இணைந்து அனைவரும் செயல்படுவோம் என வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இம்முகாமில் 154 தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர். 4013 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். இவ் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகிய 573 ஆண்கள் மற்றும் 258 பெண்கள் என மொத்தம் 831 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.
இம்முகாமில் கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆஷிக் அலி, சார் ஆட்சியர் தி.புவனேஷ் ராம், மகளிர் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநர் கி.செந்தில்குமார், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.அண்ணாதுரை அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனம் அலுவலர்கள், வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை