கோவில்பட்டி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்
கோவில்பட்டி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார். இதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள பணிக்கர்குளம் மேல தெருவைச் சேர்ந்தவர் கற்பக பாண்டியன் மனைவி சத்யா (23). இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சத்தியா குழந்தையுடன், தம்பி குமார் என்பவர் உடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கயத்தார் கோவில்பட்டி நெடுஞ்சாலை ரோட்டில் வரும்போது எதிரே வந்த ஒரு டிப்பர் லாரி பைக் மீது மோதியதில் சத்யா குழந்தையுடன் கீழே விழுந்தார்.
இதில் லாரியின் பின் டயர் சத்யாவின் தலையில் ஏறி இறங்கியதில் அதே இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். குழந்தை சிறு காயத்துடன் தப்பியது. குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்டதும் டிரைவர் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பணிக்கர் குளம் கிராம மக்கள் நேற்று நள்ளிரவு கயத்தாறு கோவில்பட்டி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், கயத்தார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதாதேவி, கயத்தார் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே லாரி டிரைவர் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதன் பின்னர் மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
அதன் பின்பு கயத்தார் போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலை மறியல் காரணமாக நெல்லை - கோவில்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை