Header Ads

  • சற்று முன்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தின் மாரியம்மன் கோயில் சாவியை தர மறுப்பு

    ராஜபாளையம் அருகே கோயில் சாவியை வழங்க மறுக்கும் ஒரு தரப்பினரை கண்டித்து, அதே பிரிவை சேர்ந்த மற்றொரு தரப்பினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தின் நடுவே மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஊரில் வசித்து வரும் ஒரே பிரிவினர் இரண்டு தரப்பாக உள்ளனர். எனவே கோயிலில் வழிபாடு மற்றும் புரட்டாசி பொங்கல் திருவிழா நடத்துவதற்கான உரிமை ஒவ்வொரு ஆண்டும் முறை வைத்து இரண்டு தரப்பினருக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த புரட்டாசி மாதம் திருவிழா நடத்திய தரப்பினர், கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரிவினருக்கு கோயில் சாவியை வழங்க வேண்டும். ஆனால் இது வரை சாவி வழங்கப்படவில்லை.

    இது குறித்து கேட்டதற்கு அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறியும், சாவியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த வாரம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக கடந்த 26ம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே பேச்சு வார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.


    இந்த நிலையில் கோயில் சாவியை பெற்றுத் தருவதற்கு அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, இன்று காலை ஊருக்கு மேற்கு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அப் பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளதால் கோயில் முன்பாகவும், போராட்டம் நடைபெறும் பகுதியை சுற்றிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அரசு தலையிட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அப் பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad