சாத்தூர் அருகே, பட்டாசு ஆலைக்கு தொழிலாளர்களை ஏற்றிவந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து... 8 பேர் படுகாயம்.....
சரக்கு ஏற்றும் வாகனத்தில், விதிமுறைகளை மீறி தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கி, 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சந்தையூர் பகுதியில் உள்ள, டுவின் விநாயகா என்ற பட்டாசு ஆலைக்கு இன்று காலை, சிவகாசி முருகன் காலனி பகுதியைச் சேர்ந்த முருகன் (28) என்பவரின் சரக்கு ஏற்றும் வாகனத்தில், பட்டாசு ஆலைக்கு தேவையான அட்டைப்பெட்டி உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிக்கொண்டு, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் ஏற்றிக்கொண்டு பட்டாசு ஆலைக்கு சென்று கொண்டிருந்தனர். சாத்தூர் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில், மணிப்பாறைப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எடிசன் (34), நிஷான் (29) என்பவர்கள் வந்த சொகுசு கார், சரக்கு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. சொகுசு கார் மோதியதில் சரக்கு வாகனம் அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேனில் இருந்த பட்டாசு ஆலை தொழிலாளர்கள் சிக்கி படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அந்தப்பகுதியில் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். விபத்தில் சிக்கி காயமடைந்த சரக்கு வாகன ஓட்டுனர் முருகன் (28), மணிகண்டன் (24), ஆகாஷ் (20), முத்துமாரியப்பன் (45), ஜெயப்பிரபு (42), முத்துமாரி (30), பாண்டிகணேஷ் (18), முத்துக்குமார் (20) ஆகிய 8 பேரும் மீட்கப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஓட்டுனர் முருகன் உட்பட 3 பேர், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை