தமிழக அரசு பேரறிவாளனின் பரோல் மனுவை நிராகரித்தது
பேரறிவாளனுக்கு பரோல் கேட்ட மனுவை தமிழக அரசும் நிராகரித்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அற்புதம்மாளின் மனுவை கடந்த ஜூலை 29ம் தேதி சிறைத்துறை ஐ.ஜி நிராகரித்து விட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அற்புதம்மாளின் மனு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கே முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பேரறிவாளன் பரோல் மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பேசிய நீதிபதிகள் இவ்வழக்கில் வரும் செவ்வாய்கிழமை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை