லண்டனில் இருந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட கோவை பெண்மணி : ஹோட்டலில் தற்கொலை
லண்டனில் இருந்து சென்னை வந்து தனிமைப்படுத்தலுக்காக தனியார் ஒட்டலில் தங்கியிருந்த கோவை பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா காரணமாக தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை கடந்த மே மாதம் முதல் இயக்கி வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு இதுவரை 68,306 பேர் வந்துள்ளனர். இதில் 899 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் அரசு அமைத்த கல்லூரிகளில் இலவசமாகவும் ஒட்டல்களில் கட்டணம் செலுத்தியும் 14 நாள் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கடந்த 24ந் தேதி லண்டனில் இருந்து வந்த பயணிகள் பரங்கிமலையில் உள்ள தனியார் ஒட்டலில் தனிமைப்படுத்த தங்க வைக்கப்பட்டனர். அதன்படி லண்டனில் இருந்து வந்த கோவை சேர்ந்த மனோன்மணி (47) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. மேலும் ஒரு வார காலம் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
லண்டனில் உள்ள மகளிடம் பேசிக்கொண்டு இருந்த மனோன்மணி கொரோனா தொற்று இல்லாமல் இங்கு இருப்பது பயமாக இருக்கிறது என்று புலம்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லண்டனில் உள்ள மகள் செல்போனில் மனோன்மணிக்கு அழைத்து உள்ளார். நீண்ட நேரமாக எடுக்காததால் நண்பர்களிடம் சென்று பார்க்குமாறு தகவல் கூறினார். அவர்கள் ஒட்டலுக்கு சென்று மனோன்மணி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனோன்மணி கொரோனா பயத்தில் தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை