Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது


    தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குனர் காந்திராஜன் அனைத்து மாவட்டங்களும் தீ மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நேற்று திருவண்ணாமலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் தலைமை தாங்கினார். உதவி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார்

    கலெக்டர் கே.எஸ்கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அலெக்சாண்டர், சுப்பிரமணியன், விஸ்வநாதன், செல்வமணி உள்பட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பல்வேறு பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஈசான்ய மைதானத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்கார வேலன் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

    அங்கு தீயணைப்பு துறை சார்பில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் கியாஸ் சிலிண்டரில் ஏற்படும் தீயை எவ்வாறு அணைப்பது, மின்சார சுவிட்சு போர்டுகளில் ஏற்படும் தீயை எப்படி அணைக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் காற்றின் வேகத்தால் தீ எப்படி வேகமாக பரவுகிறது என்பது குறித்தும், அதனை தீயணைப்பு வீரர்கள் எவ்வாறு விரைந்து வந்து அணைக்கின்றனர் என்பது குறித்தும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறுகையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இந்த சமயங்களில் அதிக இடங்களில் தீ விபத்துகள் ஏற்படுகின்றன. தீ விபத்தின் போது மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது என்றார். 
    செய்தியாளர் :திருவண்ணாமலை -  மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad