Header Ads

  • சற்று முன்

    சென்னை தலைமை செயலகத்திற்கு மொட்டை கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்


    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவும் பங்கேற்றார். போதிய பாதுகாப்பு, வாக்குகளை எண்ணுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறிய ஆலோசனைகள் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் தொடர்பாக அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதனிடையே ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சத்யபிரதா சாகுவின் அறைக்கு வந்த ஒரு கடிதத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டு இருந்ததால் உடனடியாக கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அனுப்புநர் விவரங்கள் எதுவும் இல்லாத அந்த மொட்டைக் கடிதம் எப்படி வந்தது? அனுப்பியது யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை 11 மணி அளவில் அந்தக் கடிதம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad