Header Ads

  • சற்று முன்

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க உத்தரவு


    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயமஉத்தரவிட்டுள்ளது.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையின் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை நியமித்தது. தூத்துக்குடிக்கு வந்த அந்த குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் கருத்து கேட்ட அவர்கள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களையும் பெற்றனர்.

    சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துகளைப் பெற்றனர். இந்நிலையில் டெல்லி சென்ற மூவர் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தது. அந்த ஆய்வறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது எனக் கூறிய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கியது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க உத்தரவிட்டதுடன், துண்டிக்கப்பட்ட மின்சாரத்தையும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கவும் ஆணையிட்டது. அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் போது மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதில், வேதாந்தா நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் செலவில், தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
    மேலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான புகார்களை, பொதுமக்கள் தெரிவிக்க இணையதள வசதி செய்ய வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad