தண்டராம்பட்டு அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து ! மாணவர் உட்பட 7 பேர் காயம் ...
தண்டராம்பட்டு அடுத்த சின்னையம்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வரும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளியில் வேன் உள்ளது.
இன்று காலை வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை அழைத்து வர சென்றது. வேனை தானிப்பாடி பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 40). என்பவர் ஓட்டிச் சென்றார். வெப்பூர்செக்கடி, மலையனூர்செக்கடி, தானிப்பாடி ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
தானிப்பாடி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்த மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர்.இதில் வேன் டிரைவர் காமராஜ் (வயது 40). சவுந்தர்யா (5). மாலதி (6). சபிதா (7). வெற்றிவேல் (4). ரசிதா (5). சாலினி (7). உள்பட 7 பேர் காயமடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்டு தானிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து பற்றி தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்று பதறியபடி ஆஸ்பத்திரியில் குவிந்தனர். விபத்து குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: T.V . மூர்த்தி
கருத்துகள் இல்லை