கேரள பிஷப் மீதான பாலியல் புகார்: திருச்சபைகள் மீதான நம்பிக்கை குலைகிறதா?
கன்னியாஸ்திரீ ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, விசாரணைக்கு உள்ளாகியுள்ள ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால் பதவி விலக முன்வந்ததை கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திகான் ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தனது ஜெபமாலையை பயன்படுத்துவதை கீதா சாஜன் நிறுத்தவில்லை. கன்னியாஸ்திரியாவதற்குப் படிக்கும் தனது மகளின் பாதுகாப்பு குறித்த தமது அச்சத்தைக் குறைக்க இதுவே அவருக்கு வழி.
ஒரு கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பிஷப்பை கைது செய்யக்கோரி கொச்சியில் நடந்த போராட்டத்தை கீதாவும் அவரது கணவர் ஷாஜன் வர்கீசும் பார்த்தனர்.
"ஒரு தாயாக என் மகளின் பாதுகாப்பு குறித்து எனக்கு கவலை எழுந்துள்ளது. கன்னியாஸ்திரிகள் சபைதான் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாகத் தோன்றியது. இப்போது அதுவும் பாதுகாப்பானது என்று தோன்றவில்லை," என்கிறார் கீதா
."இந்தச் செய்தியைக் கேட்டதும் என் மனைவி அழத் தொடங்கினார். கன்னியாஸ்த்திரீ ஆவதற்குப் படிக்கும் எங்கள் மகளின் படிப்பை நிறுத்த வேண்டும் என அவர் விரும்பினார்," என்கிறார் ஷாஜன். பிரான்கோ முலக்கால் கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டத்தைத் தொடங்கியதன் மூலம் அதில் ஈடுபட்ட கன்னியாஸ்திரீகள் ஐவரும் வரலாறு படைத்துள்ளனர் இதற்கு முன்னரும் கன்னியாஸ்திரீகள் மற்றும் ஆயர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், திருச்சபையில் நடந்த சம்பவத்துக்கு எதிராகவே அவர்கள் போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை.
"இதற்கு முன்பு இத்தகைய போராட்டம் நடந்ததே இல்லை. திருச்சபை நடவடிக்கை எடுக்காததால் இது நடக்கிறது," என்கிறார் 60 ஆண்டுகாலமாக கேரளாவின் நிகழ்வுகளை கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.பி பாஸ்கர்.
பாலியல் குற்றம் சுமத்தியுள்ள கன்னியாஸ்திரீயின் சகோதரியான இன்னொரு கன்னியாஸ்திரீ ஆல்ஃபியும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஐவரில் ஒருவர். அவர்களின் இன்னொரு சகோதரியும் மூன்று நாள் உண்ணாநிலை போராட்டத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் தாங்கள் திருச்சபையிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால்தான் தெருவில் இறங்கிப் போராடியதாகக் கூறுகிறார் ஆல்ஃபி.
2019-ல் படிப்பை முடிக்கும் வரை தங்கள் 26 வயது மகள் தங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்பதுதான் கீதாவின் அச்சத்துக்குக் காரணம்.
ஒரு திருமணமான பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக, சில மாதங்களுக்கு முன்னர் நான்கு ஆயர்கள் நீதிமன்றப் படிகளை ஏறினர்.
கருத்துகள் இல்லை