Header Ads

  • சற்று முன்

    40 ஆண்டு பழமைவாய்ந்த மேம்பாலம் இடிந்து விழ்ந்தது


    கொல்கத்தாவில் 40 ஆண்டுகள் பழமையான மேம்பாலம் இடிந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளுக்குள் 6 பேர் சிக்கியிருப்பதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
    தெற்கு கொல்கத்தாவில் மஜெர்ஹெட் என்ற இடத்திலிருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி மாலை 5 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. சுமார் 40 ஆண்டுகள் பழமையான அந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த நேரத்தில் பாலத்தில் சென்ற கார்கள், இருசக்கர வாகனங்களும் விபத்தில் சிக்கி நசுங்கின. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருந்ததால் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது.
    25 பேர் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல்துறை, தீயணைப்புதுறை, தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
    அந்த பாலத்தை நோக்கி செல்லும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பாலத்திற்கு அடியில் ரயில் பாதை செல்வதால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பாலத்தை பராமரிக்க வேண்டியது, பொதுப்பணித்துறை, ரயில்வேதுறையின் பொறுப்பு என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    பழமையான அந்த பாலம் கனமழை காரணமாக வலுவிழந்து விழுந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், மாநில அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த விபத்து துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad