மாறன் சகோதரர்கள் மனு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கலாநிதி மாறன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கலாநிதி மாறனின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டனர். இதேபோன்று தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த உச்சநீதின்றம், வழக்கு விசாரணையை எதிர்கொள்ளுமாறு கடந்த 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை