போலி டாக்டரிடம் அபாஷன்!! கல்லூரி மாணவி உயிர் பலி !
ஓமலூர் அடுத்த பொம்மியம்பட்டியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, கல்லூரியில் உடன் பயின்ற காதலனால் கருத்தரித்தார். பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்று அஞ்சிய அவர், சுல்தானா என்ற கருக்கலைப்புக்கு பெயர் போன போலி மருத்துவர் குறித்த தகவலை காற்றுவாக்கில் காதில் வாங்கியுள்ளார். நடுப்பட்டி கொல்லர் தெருவில் வீட்டிலேயே போலி மருத்துவம் பார்த்து வந்த சுல்தானாவை கடந்த மாதம் 28 ஆம் தேதி நாடி பிரச்சனையைக் கூறியுள்ளார் அந்த மாணவி.
எதிரில் அமர்ந்து இருப்பவர் தான் தனது உயிருக்கு உலை வைக்கப் போகும் போலி மருத்துவர் என்று அந்த மாணவிக்கு அப்போது தெரியவில்லை. மாணவியின் பிரச்சனையைக் கேட்ட சுல்தானா, வீட்டில் குவியலாக வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளில் சிலவற்றை மாணவிக்கு வழங்கியதுடன், கருக்கலைப்புக்கான ஊசியையும் செலுத்தியுள்ளார். அன்று நிம்மதியாக வீட்டுக்குச் சென்ற மாணவிக்கு இரவில் கடும் உதிரப்போக்குடன், தீவிர வயிற்று வலி ஏற்பட்டது.
வயிற்று வலியால் மகள் அலறுவதைக் கேட்ட பெற்றோர், உடனடியாக தனியார் மருத்துவமனையில் மகளை சேர்த்தனர். அப்போது பெற்றோரிடம் மனம் விட்டு உண்மையை சொல்லி அந்த மாணவி கதறியுள்ளார். உண்மையை அறிந்த பெற்றோர் மகளின் நிலையைக் கண்டு மனம் குமுறினர். அங்கு மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 31ஆம் தேதி மாணவி உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை