சிவகங்கை மாவட்டத்தில் துண்டிக்கப்பட்ட தலையுடன் சென்றவர் கைது
சிவகங்கையில் பட்டப் பகலில் நுங்கு வியாபாரியின் தலையை அரிவாளால் துண்டித்து கொலை செய்து விட்டு, துண்டிக்கப்பட்ட தலையை கையில் வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்த நபரால் பதற்றம் ஏற்பட்டது.
சிவகங்கை காமராஜர் சாலையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர், புளியங்குளத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரிடம் இருந்து நுங்குகளை மொத்தமாக வாங்கி, விற்பனை செய்து வந்துள்ளார். இன்று மானாமதுரையில் விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பாண்டி, பூமிநாதனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து முத்துப்பாண்டியை தேடி பூமிநாதன், சிவகங்கை சென்றார். வாரச்சந்தை ரோடு அருகே உள்ள மதுக்கடையில் முத்துப்பாண்டி இருப்பதை அறிந்த பூமிநாதன், அங்கு சென்று நுங்கு வாங்கியதற்கு பணம் ஏன் தரவில்லை என்று கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக வாக்குவாதம் முற்றவே இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பூமிநாதன், தாம் கூடையில் வைத்திருந்த நுங்கு சீவும் அரிவாளால் முத்துப்பாண்டியின் தலையை துண்டித்தார். இதைக் கண்டவர்கள் அங்கு இருந்து சிதறி ஓடவே, சிவகங்கை நகர் பரபரப்பானது. துண்டிக்கப்பட்ட தலையுடன் பூமிநாதன் சாலையில் நடந்து சென்றார். இதுகுறித்து நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்தனர். போலீசாரைக் கண்ட பூமிநாதன், தபால் நிலையம் எதிரே துண்டிக்கப்பட்ட தலையையும், அரிவாளையும் வீசி விட்டு தப்பி ஓட முற்பட்டார். அவரை விரட்டிப் பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதை அடுத்து முத்துப்பாண்டியின் தலையையும், உடலையும் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை