டெல்லியில் பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் மோடி உரை .
நாட்டின் முன்னேற்றத்திற்காக, வடகிழக்கு மாநிலங்கள் இன்று முன்னோக்கி வந்துக்கொண்டிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3 மாநில தேர்தல் முடிவுகளை அடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். திரிபுராவில் பாஜக ஆட்சி மலர ஏராளமான தொண்டர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக குறிப்பிட்ட மோடி, அவர்களது தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினார்.
திரிபுரா, மேற்குவங்கம், கர்நாடகாவில் பாஜக தொண்டர்களை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி தான் என்றும் தெரிவித்தார். சூரியன் சிவப்பு நிறத்தில் மறைந்து, காவி நிறத்தில் உதயமாகும் என, திரிபுரா வெற்றியை பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நாடு முழுமையான வளர்ச்சியடைய மத்திய அரசு பாடுபடும் என்றும் பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டார்
கருத்துகள் இல்லை