ITI - மாணவன் ரஞ்சித் குத்தி கொலை - CCTV கட்சியின் அடிப்படையில் கொலையாளி மூன்று பேர் கைது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஐ.டி.ஐ. மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் செல்ஃபோன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19-ஆம் தேதி லயோலா கல்லூரியிலிருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலையில் இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டவர் சென்னை நுங்கம்பாக்கம் அபு தெருவில் வசிக்கும் ரஞ்சித் என்பதும், இவர் கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் ஐ.டி.ஐ. படித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் 3 பேர் வருவதும் அவர்களில் இருவர் ரஞ்சித்திடம் தகராறு செய்வதும் கத்தியால் கழுத்தில் குத்துவதுமான காட்சிள் பதிவாகியிருந்தன. காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்தவர்கள் சென்னை வடபழனியைச் சேர்ந்த கார்த்திகேயன், நவீன்குமார் ஆகியோரையும் போரூரைச் சேர்ந்த சிவகணேஷ் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, தாங்கள் தாக்கிய ரஞ்சித் இறந்துவிட்டாரா என்று கொள்ளையர்கள் கேட்டுள்ளனர். மேலும், கொலை செய்வது தங்கள் நோக்கம் அல்ல என்றும் செல்ஃபோன் பறிக்க மட்டுமே ரஞ்சித்தை தாக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை