புத்தாண்டு ராசி பலன் - கடகம்
மக்களுக்காக சிந்திக்கும் நீங்கள் மகத்தான வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக இருக்கும். ‘உங்களுக்கு யோகமான காலமாகத்தான் இருக்கிறது பணம் கொட்டோ கொட்டு என கொட்டும்.!’ –என யாராரோ இவ்வளவு ஆண்டுகளாக சொல்லியிருப்பார்கள். ஆனால் எதுவும் இதுவரை நடக்கவில்லை என புலம்பி தீர்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். இனிமேல்தான் உங்களுக்கு உண்மையாகவே யோககாலம் ஆரம்பிக்கப்போகிறது. எவ்விஷயத்திலும் அப்டேட்டாக இருக்கும் உங்களிடம், முடிவுகள் எடுப்பதில் குழப்பத்தில் இருப்பவர்கள் ஆலோசனை கேட்டுச் செயல்பட்டால் மகத்தான சாதனைகளை நிகழ்த்துவார்கள். பெயர், புகழை விரும்பாத உங்களைத் தேடி மக்கள் குவியல் குவியலாக கூடுவார்கள். குடியிருப்போர் நலச் சங்கமாக இருந்தாலும், குழாயடி சண்டையாக இருந்தாலும் தலைவராக உங்களைத்தான் அமர வைத்து அழகு பார்ப்பார்கள். நியாயம் பேசுவதில் வல்லவராக இருப்பதால் ஏரியாவில் உங்களுக்கென மதிப்பும், மரியாதையும் சகட்டுமேனிக்கு இருக்கும். வெளியில் சிங்கமாக இருக்கிற நீங்கள் வீட்டுக்குள் எலியாகவே இருப்பீர்கள். குடும்பத்தினர் மீதான அன்புக்கு அடிமையாவீர்கள்.
உங்கள் தன ஸ்தானாதிபதியாகிய சூரியன் பண்ணிரெண்டு ராசியையும் மாதாமாதம் கடப்பதாலும், காலையில் உதித்து மாலையில் மறைவதாலும் நீங்கள் சகல விஷயங்களையும் உள்வாங்கி அனைவரிடமும் சரிசமமாக பழகுகிறவர்களாக இருப்பீர்கள். எதிராக செயல்படுபவர்களின் சதிச்செயல்கள் எதுவாக இருந்தாலும் உடனே மறந்து மன்னிக்கும் மனப்பக்குவம் நிறைந்தவர் நீங்கள். தொழிலில் நவீனங்களைப் புகுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிடும் வல்லமை இருக்கும். மனோகாரகனான சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் அதில் தன் முத்திரையை மூளை பலத்தால் அழுத்தமாக பதிப்பீர்கள். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால் மற்றவரிடம் பேசும்போது வார்த்தைகளில் வர்ணஜாலம் காட்டுவீர்கள். தந்தையின் பெயருக்கு அப்பழுக்கு ஏற்படாதவாறு சமூகத்தில் நடந்து கொள்வதால் உங்களின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். சில அடையாளங்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு பெற்றோரே பக்கபலமாக இருந்து உதவுவார்கள்.
தர்மம் தக்க சமயத்தில் தலைகாக்கும் என்பார்கள் ஆனால், உங்களுக்கு தகப்பனாரே ஆபத்பாந்தவனாக இருந்து வழி நடத்துவார். தங்கள் ராசியின் மீது ராகு சஞ்சாராம் செய்யும் காலகட்டம் ஜோதிட சாஸ்திரப்படி சாதகமில்லை என்றாலும் ஏற்கனவே தனுசுராசியில் அமர்ந்திருக்கும் சனிபகவான் உங்களை சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்க்கத்தான் போகிறார். சனிபகவானை மிஞ்சி ராகுவும் கேதுவும் உங்களுக்கு கெடுதல் புரிய முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். குரு பார்வை பட்டால் அசுப கிரகமும் சுபத்தன்மை பெறும் என்பதால் கேதுவும் நல்லவராகவே இருப்பார். வீரியமிக்க விதையிலிருந்து விளையும் பயிரைப் போல வேகமாக வாழ்வில் முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். குழந்தையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் தம்பதியருக்கு பெயர்வாங்க பிள்ளை பாக்யம் கிடைக்கும். ஆன்மிக தொடர்புடைய பொருட்களை விற்பவர்கள் பெரும் லாபங்களை ஈட்டுவார்கள். அரசுபணியாளர்கள் அலுவலக காரியங்களில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். வெளிதேச பயணங்களால் வருமானம் தன்மானமும் உயரும். குடும்பத்தினர்களின் ஒத்துழைப்பு பணியில் சப்போர்ட்டாக அமையும். அரசுப் பணியாளர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை அடைவார்கள்.
கருத்துகள் இல்லை