தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி அரசு ஐடிஐ வளாகத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஸ்டாலின் கனவு பலிக்காது
தமிழகத்தில் ஆட்சி கலைந்து விடும். கட்சி உடைந்து விடும் என்ற ஸ்டாலின் கனவு பலிக்காது : முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சி கலைந்துவிடும். கட்சி உடைந்து விடும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது என தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:ஜெயலலிதா மறைவிற்கு பின் இந்த ஆட்சி கலைந்துவிடும். கட்சி உடைத்து விடும் என்ற எதிர்பார்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தினமும் ஒரு பொய்யை சொல்லி வருகிறார். அந்த கனவு பலிக்காது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது கனவு திட்டங்களை நானும், துணை முதல்வரும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இணைந்து செயல்படுத்தி வருகிறோம்.
தற்போது முட்டை விலை உயர்வினால் சத்துணவில் முட்டையை நிறுத்திவிடுவார்கள் என பொய்யான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கினார். ஆனால் ஜெயலலிதா வாரத்தில் 5 நாட்களும் முட்டை வழங்கினார். தற்போது முட்டை விலை உயர்த்தாலும் வேறு வழியிலாவது இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்.ஆகவே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கனவு பலிக்காது.
பொய்யான தகவலை பரப்பும் ஸ்டாலின்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது.கடந்த கால தி.மு.க., ஆட்சியில் சட்ட ஒழுங்கு எப்படியிருந்தது என்பது மக்களுக்கே தெரியும். சிலர் தவறானவர்கள் பேச்சை கேட்டு தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார். இதற்கு குட்டி கதை சொல்கிறேன். ஒரு நரி நான் காட்டுக்கு ராஜாவாக ஆக வேண்டும் என கரடியிடம் யோசனை கேட்டது. அப்போது கரடி நீ ஊளையிடாமல் வாயை பொத்தி இருந்தாலே நீ ராஜாவாகிவிடுவாய், என கூறியது. அதன் பிறகு நரி ஒரு உணவு துண்டை வாயில் கவ்வி கொண்டு வந்தது. எதிரே வந்த காண்டா மிருகத்திடம் இந்த உணவை சாப்பிடு என்று வற்புறுத்தியது.
அதற்கு காண்டா மிருகம், எனக்கு உடம்பு சரியில்லை கூறி மறுத்தது. ஆனால் நரி விடாமல் அதை சாப்பிட வைத்தது. இதனால் கோபமடைந்த காண்டா மிருகம் தனது கொம்பால் நரியை தூக்கி வீசியது. இதில் நரி பலத்த காயமடைந்தது. அப்போது அங்கு வந்த கரடியிடம் உன் பேச்சை கேட்காமல் போனதற்கு எனக்க நேர்ந்த கதியை பார்த்தாயா? என்று கண்ணீர் விட்டு கதறியது. இதே போல தான் சிலர் யார் யாரோ பேச்சை கேட்டு தவறான பாதையில் நடந்து வருகிறார்கள். தமிழகத்தை இந்த அ.தி.மு.க., அரசு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆசியுடன் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
அரசு எப்படி நடத்த வேண்டும் என யாரும் பாடம் எடுக்க வேண்டாம் : துணைமுதல்வர் ஓபிஎஸ் மாநில அரசை எப்படி நடத்த வேண்டும் என எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம் என எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
இதுவரை 24 மாவட்டங்களில் நடந்த எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாக்களிலேயே இந்த மாவட்டத்தில் தான் அதிகளவில் கூட்டம் கூடியுள்ளது.தாலிக்குத் தங்கம் உட்பட பல்வேறு திட்டங்களை தந்து, நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எந்த நிலையிலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடி வருவது அதிமுகவின் ஆட்சி.எனவே மாநில அரசை எப்படி நடத்த வேண்டும் என எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை