Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்‍டி நகர்பகுதியில் - நகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற வார்த்தை போல என்று விடியும் கோவில்பட்டி நகரின் அவலங்கள்  தீர  என்று மனதில் குமறிக்கொண்டு இருந்த மக்களுக்கு இன்று ஒரு தொடக்கப்புள்ளி கிடைத்துள்ளது.

     அழகான நகரமாக உருவாக வேண்டிய நகரம் இன்று ஆக்கிரமிப்புகளால் சிக்கி தவித்து கொண்டு இருக்கிறது. நம்மில் சமூக ஆர்வலர்கள் , மக்கள் பிரதிநிதிகளாக காட்சியளிக்கும் சில தனிநபட்ட  நபர்களின் ஆக்கிரமிப்புகளால் இந்த நகரின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் பின்னோக்கி கொண்டு சென்று கொண்டேதான் இருந்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி, நல்ல ஆரம்பத்திற்கான தொடக்கப்புள்ளி கிடைக்காத என்ற தவம் காத்து இருந்தனர் கோவில்பட்டி மக்கள், சில அரசு அதிகாரிகள் முயற்சி மேற் கொண்டாலும், அரசியல், சாதியக்கூட்டங்கள் அதனை தனது அதிகாரபலத்தினால் அவர்களை கட்டி போட வைத்தது மட்டுமின்றி, இந்த ஊரை விட்டு மாற்றவும் செய்தன.

    இன்றைக்கு சென்னையில் ஏற்பட்டுள்ள மழை சேதங்களுக்கு மிக முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் தான்.. இன்று சென்னை நாளை தமிழகத்தின் எந்த பகுதிக்கும் இந்த நிலைமை வரலாம். ஆனால் அதற்குள் அரசு விழித்துக்கொள்ள வேண்டும். கோவில்பட்டி நகரில் ஒரு காலத்தில் ஊரணிகள் அதிகம்.அதற்கு சான்று கோவில்பட்டி நகரின் பல்வேறு தெரு பெயர்கள் ஊரணி பெயரில் அளிக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் நகராட்சி கழிப்பிடங்கள் எப்படி காணமால் போனதோ அதே மாதிரி ஊரணிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. இதில் தனியார் மட்டுமல்ல, அரசும் தான், சில ஊரணிகள் அரசு கட்டிடங்களாக இன்று காட்சியளிக்கின்றன. அரசே ஆக்கிரமிப்பு செய்யும் போது நாம் செய்தால் என்ன என்பது தனி நபர்களுக்கு கொடுத்த ஊக்கம் தான்.

    இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறி 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  தொடர்ந்தார். (வழக்கு எண் : )கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகு மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் பல முயற்சிகள் எடுத்தாலும் பல தடைகளால் நமக்கு ஏன் வம்பு என்று அமைதியாக இருந்து விட்டு, சாலைகளில் சில நபர்கள்  தங்கள் கடைகளில்வைத்தது இருந்த முகப்புகளை மட்டும் அகற்றவதும், அவர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வதும் தொடர்கதையாக இருந்து வந்தது. உதரணமாக இதற்கு முன்பாக நகராட்சி ஆணையராக இருந்த சர்தார் சில முடிவுகளை எடுத்தார். நகராட்சி நிர்வாகத்திற்கு அதிக வருவாய் கிடைக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் சில தனிநபர்கள், அதிகாரம், வாக்குவங்கி என்ற காரணங்களுக்காக அதனை முறியடிப்பு செய்தார்கள்.


    ஆனால் அதற்கான தீர்வு, மக்களின் எண்ணம் இன்று தான் நிறைவேற தொடங்கியுள்ளது. கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட நீர் நிலைகள்,நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் உத்திரவின் பெயரில் முதற்கட்டமாக கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட வண்ணாவூரணி தெருவில் கழிவு நீர் செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தனியார் கட்டிடங்கள் மற்றும் நகராட்சி கழிப்பிட கட்டிடம் ஆகியவற்றை அகற்றும் பணி தொடங்கியது. கோவில்பட்டி தாசில்தார் ஜான்சான்தேவசகாயம், நகராட்சி ஆணையர் அச்சையா ஆகியோரின் மேற்பார்வையில் ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் பிரச்சினைகள் எதுவும் ஏற்படமால் இருக்கும் வகையில் அப்பகுதியில் எஸ்.பி.மகேந்திரன் உத்தரவின் பெயரில் டி.எஸ்.பி.முருகவேல் ஆலோசனையின் படி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

    இன்றைக்கு கோவில்பட்டி நகரில் சில முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகிய 3 துறைகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளது வரவேற்க்கதக்கது. தலைமை அதிகாரிகள் நேர்மையாகவும், அச்சமில்லமால் முடிவு எடுக்கும் நிலை உள்ளதால் கடைநிலை  ஊழியர்களும் சுதந்திரமாக பணியாற்ற கூடிய நிலை உருவாகியுள்ளது 

    இந்த  தொடக்கம் இதோடு நின்றுவிடமால் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைவரையும் பாரபட்டசமில்லமால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து நெருக்கடி இல்லாத, ஆக்கிரமிப்பு இல்லாத, கழிப்பிடங்கள் வணிக வளாகமாக மாறாமல்  இருக்க இந்த கூட்டணி நடவடிக்கை எடுக்க வேண்டு என்பது அனைவரின் விருப்பம் மட்டுமல்லது. கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்கு நல்லது.
    ஆக்கிரமிப்பாளர்கள் இது வரை தங்கள் அனுபவித்து வந்தது போதும்  இனியவாது இந்த நகரம் அழகான , மக்கள் வசிக்ககூடிய நகரமாக மாற தயவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், நாளை உங்கள் சந்ததிகளும் கோவில்பட்டி நகரத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்….

    தைரியமாக செயல்படுத்திய நகராட்சி ஆணையர் அச்சையா, நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து உடனிருந்த தாசில்தார் ஜான்சன்தேவசகாயம், டி.எஸ்.பி.முருகவேல் மற்றும் 3 துறைகளை சேர்ந்த அத்துணை ஊழியர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன ..
                                                                                                                             இள‍ச‍ை மு.‍‍ல‍ெனின்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad