காஞ்சிபுரத்தில் 56-வது மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 56-வது காஞ்சிபுரம் மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள், காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தடகள சங்கத் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், மாவட்ட ஆட்சியர் சினேகா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
போட்டியின் தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சினேகா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவியர்கள் 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற பல்வேறு தடகளப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தடகளப் போட்டிகளுடன், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளிலும் 500-க்கும் மேற்பட்ட வீரர்–வீராங்கனையர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்–வீராங்கனையர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இதனிடையே, கோடைக்காலத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்–வீராங்கனையர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற வீரர்–வீராங்கனையர்களுக்கும் நிகழ்ச்சியில் ரொக்கப் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர பாண்டியன் ஐ.ஏ.எஸ், செயலாளர் திரு வளர்ச்செல்வன், துணைத் தலைவர் வழக்கறிஞர் அரவிந்த்குமார், பொருளாளர் சுமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்






கருத்துகள் இல்லை