முதலமைச்சர்களின் புகைப்படங்கள் வைப்பதில் உறுப்பினர்களிடையே போட்டி,கூச்சல்,குழப்பத்துடன் பாதியிலேயே முடிந்த காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம்
முதலமைச்சர்களின் புகைப்படங்கள் வைப்பதில் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம் கூச்சல்,குழப்பத்துடன் பாதியிலேயே முடிந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் அண்ணா அரங்கத்தில் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.துணை மேயர் குமரகுருநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டம் தொடங்கியதுமே திமுக உறுப்பினர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி,மு.க.ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால் அவர்களது புகைப்படங்களை மாமன்ற அரங்கில் மாட்ட வேண்டும் என்று கூறி அவர்கள் இருவரது படங்களையும் மாட்டினார்கள்.இதனையடுத்து அதிமுக ஆட்சிக் காலத்திலும் பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் புகைப்படத்தை அக்கட்சி உறுப்பினர்கள் மாமன்ற அரங்கில் மாட்டினார்கள்.இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் புகைப்படத்தை அரங்கில் வைக்க வேண்டும் என்று அவரது படத்தை வைத்தார்.
}கூட்டத்தில் உறுப்பினர் ஷாலினி முதலமைச்சர் விஜய் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் இரு மாதங்களில் செயல்படுத்திய நலத்திட்டங்களையும் விளக்கினார்.அப்போது திமுக உறுப்பினர்கள் அது ஷோபா மாடல் ஆட்சி என்றும்,அதிமுக உறுப்பினர்கள் திமுக ஆட்சி ஊழல் ஆட்சி என்றும் கோஷமிட்டனர்.இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கூச்சலிட்டுக் கொண்டே குறை கூறிக்கொண்டிருந்ததால் திடீரென கோபமடைந்த மேயர் எம்.மகா லட்சுமி யுவராஜ் தனது இருக்கையை விட்டு வெளியேறினார்.இதனால் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த 129 தீர்மானங்களில் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.
மாமன்ற உறுப்பினர் புனிதா சம்பத் தனது கோரிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி கூட்ட அரங்கிற்கு வெளியில் தனியாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.






கருத்துகள் இல்லை