சாத்தூர் அருகே, பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றி, 34 ஆயிரம் ரூபாய் திருட்டு.....
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (45). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாத்தூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு, தனது கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக சென்றார். ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நபர், ஏ.டி.எம்மில் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி ராமலட்சுமியிடம் இருந்த கார்டை வாங்கிக்கொண்டு பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அந்த நபர், இந்த ஏ.டி.எம். கார்டு வேலை செய்யவில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று விவரம் கேளுங்கள் என்று கூறி, ராமலட்சுமியிடம் வேறு ஒரு கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். நேற்று ராமலட்சுமி, சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று இதுபற்றி வங்கி ஊழியர்களிடம் கூறியுள்ளார். அப்போது தான் ராமலட்சுமி வைத்திருந்தது அவரது வங்கி கார்டு அல்ல என்பதும், வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து அவர் ஏமாற்றப்பட்டதும் தெரிந்தது. இந்த நிலையில் ராமலட்சுமியின் வங்கி கணக்கில் 34 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து ராமலட்சுமி, சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், ஏ.டி.எம். மையம் மற்றும் அதன் அருகில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை திருடிய மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை