Header Ads

  • சற்று முன்

    தெருக்களில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம்!

    பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத்தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

    அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்பட்ட மாடுகளை மூன்று நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக அதன் உரிமையாளருக்கு ரூ.1,550 விதிக்கப்பட்டு வந்தது. தற்சமயம் கடந்த 1ஆம் தேதி முதல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்குப் பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000 விதிக்கப்பட்டு வருகிறது.

    பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர் இரண்டு நாட்களுக்குள் அபராதத்தொகையினை செலுத்தி மாடுகளை மீட்டுச்செல்லாத நிலையில் மூன்றாவது நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாடுகளை பராமரிக்க பராமரிப்புத் தொகையாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

    மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டுத்தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச்செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாணப்பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தைப்பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

     மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும்பொழுது, உரிமையாளருக்கு மாடு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,447 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்குத் தலா ரூ.1,550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் அதிகரித்த 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 131 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்குத் தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad