Header Ads

  • சற்று முன்

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பச்சிளம் குழந்தை திடீர் மரணம் - திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.





    வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் அயாத் (வயது 26). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி தஸ்லீம் (24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்துக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 26-ந்தேதி சேர்ந்தார்.

    மகப்பேறு பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லை என்றும், கழிவறை சுத்தமாக இல்லை என்றும் கூறி, அவர் மகப்பேறு வார்டுக்கு வெளியே உள்ள கட்டண கழிவறைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவ்வாறு சென்று வந்தபோது, அவருக்கு எதிர்பாராத விதமாக கழிவறை வாசலிலேயே அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

    இதையறிந்த உறவினர்கள் தஸ்லீமை மீட்டு மகப்பேறு வார்டுக்குள் அழைத்துச் சென்றனர். குழந்தையை தூக்கி சென்று, டாக்டர்களிடம் ஒப்படைத்தனர். டாக்டர்கள், அந்தக் குழந்தையை 2 நாட்களாக இங்குபேட்டரில் வைத்துள்ளதாகக் கூறினர். 28-ந்தேதி மாலை 4 மணியளவில் அக்குழந்தை திடீரென இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆத்திரம் அடைந்த அவர்கள், தஸ்லீமுக்கு உரிய படுக்கை வசதி, குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி குற்றம் சாட்டினர். குழந்தை இறந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தஸ்லீம்-அயாத் தம்பதியருடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மகப்பேறு கட்டிடம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், அவர்கள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர். அந்தத் தம்பதியினரை அழைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad