Header Ads

  • சற்று முன்

    கிரிவல பாதையில் கோவில் கட்டுமான பணிக்கு தடை விதித்த இணை ஆணையர் ஞானசேகரன்


    திருவண்ணாமலை தாலுகா அடிஅண்ணாமலை கிராமம் கிரிவலப்பாதையில் ரேணுகை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இடிக்கப்பட்டு தற்போது ஊர் பொதுமக்கள் சார்பில் அந்த இடத்தில் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் கோபுரம் போன்றவை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கோவில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது என்று அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அப்போது அப்பகுதி மக்கள் இந்த அறிவிப்பு பலகை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் பொதுமக்கள் சார்பில் அந்த அறிவிப்பு பலகையை அகற்றவும், இது ஊர் கோவில் என்றும் அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அறிந்த அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
    பின்னர் இணை ஆணையர் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு இணை ஆணையரிடம் ஏன் பணியை நிறுத்த வேண்டும் என்று கேட்டனர். அப்போது அவர், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கோவில். இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும் என்றார். அப்போது பொதுமக்கள், இது ஊருக்கு சொந்தமான கோவில். நாங்கள் இந்த கோவிலில் 3 தலைமுறைகளாக வழிபட்டு வருகின்றோம். கிரிவலப்பாதையில் இருப்பதால் இக்கோவில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில் அல்ல என்றனர்.

    பின்னர் கோவில் கட்டுமான பணி குறித்து பொதுமக்கள் இணை ஆணையரிடம் மனு அளித்தனர். எதுவாக இருந்தாலும் அலுவலகத்தில் வந்து மனு  கொடுங்கள் என்றார்.இதுகுறித்து இணை ஆணையர் ஞானசேகரன் கூறுகையில், இந்த கோவில், அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இங்கு கட்டுமான பணிகள் நடைபெற வேண்டும் என்றால் அறநிலையத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் பழைய கோவில் இடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. தற்போது கோவில் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    செய்தியாளர் : திருவண்ணாமலை -  மூர்த்தி


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad