வேப்பேரி காவல் ஆணையம் எதிரே துணிகர கடத்தல் சம்பவம்
சென்னை வேப்பேரியில் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து ஆட்டோவில் கடத்திச் சென்ற சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு ஐயா தெருவைச் சேர்ந்த எமல்டா என்ற 25 வயது இளம்பெண் செவன்த் டே மெட்ரிக் பள்ளியில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.. வழக்கமான ஆட்டோ வராததால் நேற்று இரவு பணி முடிந்ததும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்ல அவ்வழியே வந்த ஆட்டோவை மறித்து சேத்துப்பட்டு செல்வதற்காக ஏறினார். ஏறியதும் தம் மீது ஏதோஸ்ப்ரே செய்ததை போல் உணர்ந்த அவர், மயக்கமடைந்தார்.
கண்விழித்துப் பார்த்த போது போரூர் அருகே சிக்னலில் இருந்ததை உணர்ந்த எமல்டா, ஆட்டோவை நிறுத்துமாறு கூச்சலிட்டார். இதைக் கேட்டு அருகிலுந்து சக வாகன ஓட்டிகள் உதவ முன்வருவதற்குள், ஆட்டோவை ஓட்டுநர் வேறு பாதையில் திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது, ஆட்டோவின் வேகம் குறைந்ததை உணர்ந்து எமல்டா கீழே குதித்து தப்பியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிவிட்டான். ஆட்டோவில் கைப்பையை எமல்டா தவறவிட்டார். அதில் ஏ.டி.எம். கார்ட், பணம் உள்ளிட்டவை இருந்ததாக எமல்டா கூறியுள்ளார். கடத்தப்பட்ட சம்பவம் குறித்தும், கைப்பையை மீட்டுத் தரக்கோரியும் வேப்பேரி காவல்நிலைய போலீசாரிடம் அவர் புகார் அளித்தார்.
பள்ளிக்கு முன் உள்ள சிசிடிவியில் பதிவான ஆட்டோவின் காட்சிகளைக் கொண்டு வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை