Header Ads

  • சற்று முன்

    கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து பலி ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்


    ஆந்திர மாநிலம், விஜயவாடா  கிருஷ்ணா நதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்ததில்,  பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்தது. 21 பேர் காப்பாற்றப்பட்டனர்.  மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (திங்கள்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
    விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் தினந்தோறும் மாலையில் நதிக்கு பவித்ர ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பவித்ர ஹாரத்தியை காண பவுர்ணமி கரை, பவானி கரையிலிருந்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள விசைப்படகுகள் மூலம் இப்ரஹிம் பட்டினம், ஃபெர்ரி எனும் இடத்திற்கு பயணிகள் சென்றனர்.
    அப்போது சிறிது தூரம் சென்றவுடன் 45 பயணிகளை ஏற்றிச்சென்ற விசைப்படகு நதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் உடனடியாக போலீஸார், மீனவர்கள், உள்ளூர் வாசிகள், தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஞாயிற்று கிழமை இரவு வரை 16 சடலங்கள் மீட்கப்பட்டன. 21 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடைபெற்றது.  இதில் இன்று காலை மேலும் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது

    ரூ.8 லட்சம் நிதியுதவி:

    உயிரிழந்தர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 8 லட்சம் நிதி உதவி வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதில் சந்திரண்ணா காப்பீடு திட்ட உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ. 2 லட்சம் வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது

    மீட்பு பணிகள் தீவிரம்


    இந்த படகு விபத்தில் இதுவரை 19பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் விஜயவாடாவில் உள்ள ஆந்திர மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறந்தவர்களில் ஓங்கோல் வாக்கர்ஸ் கிளப் சார்பில் வந்த பயணிகள் மற்றும் நெல்லூர், விஜயவாடாவை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதில் 10 பெண்கள், 8 ஆண்கள், ஒரு 14 வயது சிறுவன் உள்ளனர்.
    மகளின் உடலை பார்த்து தாய் மாரடைப்பால் மரணம்
    இந்நிலையில், இன்று காலை உயிரிழந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதில், ஓங்கோலை சேர்ந்த லீலாவதி என்பவரின் சடலத்தை பார்த்து அவரது தாயார் லட்சுமி காந்தம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் இவர்களது வீட்டில் சோகம் இரட்டிப்பானது.இந்த படகு விபத்து பலரது குடும்பங்களை புரட்டி போட்டுள்ளது. கணவன், மனைவி, தாய், தந்தையை இழந்த பலர் மருத்துவமனை முன் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad