Header Ads

  • சற்று முன்

    எரி நட்சத்திரங்கள்: விரைவில் விண்கல் பொழிவு – ஆச்சரியம் தரும் தகவல்


    அது அழகாக இருக்கும், எளிதாக அந்தக் காட்சி கிடைக்கும், அது இலவசமானது: எரி நட்சத்திரங்களின் கண்ணைக் கவரும் காட்சிகள் உங்களுக்கு அருகே வானத்தில் தோன்றப் போகிறது. எப்படி, எப்போது அதை நீங்கள் அனுபவிக்கலாம் என்பதையும், அது ஏன் நடக்கிறது என்பதையும் இங்கே அறியலாம்.

    தூசிகள் மற்றும் குப்பைகளுக்கு இடையில் நடந்து செல்வதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சில நேரங்களில் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். ஆகஸ்ட் மாத மத்தியில் விண்வெளி குப்பைகளுக்கு இடையில் பூமி கடந்து செல்லும் போது, இரவு நேரத்தில் வானில் இதைப் பார்க்கலாம்.

     எரிநட்சத்திரங்களின் கண்கொள்ளா காட்சியைக் கண்டு அனுபவிப்பதற்கான வாய்ப்பு இது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நெருப்புக் கோளங்களையும் கூட பார்க்கலாம்.

    எரிநட்சத்திரங்கள் என்பவை என்ன?

    ஸ்விப்ஃட்-டட்டில் எனப்படும் வால் நட்சத்திரம் தனது சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியைப் போல இந்த வால் நட்சத்திரமும் சூரியனை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சுற்றி வருகிறது. ``ஒவ்வொரு ஆண்டும் அந்த வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில் பூமி மோதும் போது, இடிபாடுகள் குப்பைகளாக சிதறுகின்றன'' என்று கிரீன்விச் ராயல் அருங்காட்சியக வானவியல் நிபுணர் எட்வர்டு புளூமர் கூறுகிறார்.பனிக்கட்டி, தூசி, அரசியின் அளவிலான சிறிய கற்கள் என்ற அளவில் வால் நட்சத்திரத்தின் சிதறிய பகுதிகள் காற்று மண்டலத்தின் மேல் அடுக்கில் மோதும் போது, ``அது தீப் பிடித்து ஆச்சர்யமான தோற்றத்தை உருவாக்குகின்றன. ஒரு விநாடிக்கும் குறைவான நேரமே இந்தக் காட்சி தோன்றும் என்றாலும் அது அற்புதமானதாக இருக்கும்'' என்கிறார் புளூமர். ``இது நிச்சயம் நடக்கக் கூடியது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மத்தியில் இதன் அதிகபட்ச செயல்பாடு இருக்கும் என்றாலும் ஜூலை மாதத்தின் பிற்பகுதியிலும் இதைக் காணலாம்'' என்பது தான் இதன் சிறப்பு என்று அவர் தெரிவித்தார்.

    வெறும் கண்களால் இதைப் பார்க்க முடியும். எப்போதாவது ஒரு நாள் தான் இது தோன்றும் என்பதால், பல இரவுகள் நீங்கள் வானைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில் பெரிய அளவிலான வால் நட்சத்திர பகுதிகளைக் காண முடியும். ``உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், இன்னும் பிரமிக்கத்தக்க வகையில், நெருப்புக் கோளத்தையும் காணலாம்'' என்றும் புளூமர் கூறினார். பல ஆண்டுகள் இவர் கவனித்து வருகிறபோதிலும், தனது கண்களால் சில விநாடிகளுக்கு மட்டுமே இதுபோன்ற காட்சிகளை இவர் கண்டிருக்கிறார்.

    அவ்வளவு மதிப்பு மிக்கதா?

    ``நிச்சயமாக!'' என்கிறார் புளூமர். ``எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு இதைப் பாருங்கள்'' என்கிறார் அவர். இயற்கை நடத்தும் வாணவேடிக்கை தான் இந்த எரிநட்சத்திரங்களின் காட்சி. உன்னிப்பாகக் கவனித்து வந்தால், சில நேரங்களில் ஒரு மணி நேரத்தில் 100 எரிநட்சத்திரங்களை கூட பார்க்க முடியும். விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் மணிக்கு 2,15,000 கிலோ மீட்டர் வேகத்தில் நுழைகின்றன என்றாலும், அவற்றால் எந்த ஆபத்தும் நேர்வதில்லை.

    ``படுக்கையை விரித்து, படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள், கண்கொள்ளா காட்சிகளைக் காணலாம்'' என்கிறார் புளூமர். ``அது அற்புதமாக இருக்கும்'' உலகெங்கும் இருந்து இந்தக் காட்சிகளைக் காணலாம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad